வெள்ளி, ஆகஸ்ட் 04, 2006

புத்தரின் உடலில் இருந்து ஒளி தெரிகிறது.

புத்தரின் உண்மையான `ஒளி'

பிள்ளையார் விக்கிரகங்கள் பால் குடித்ததாக ஒரு தசாப்தகாலத்துக்கு முன்னர் வெளியான செய்திகளை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். உலகம் பூராவும் அடிபட்ட அச்செய்திகளைக் கேள்விப்பட்டு பின்னர் தங்கள் வீடுகளில் உள்ள பிள்ளையார் விக்கிரகங்களுக்கு பால் வைத்துப் பார்த்தவர்கள் ஏராளம். அன்று பிள்ளையார் பால் குடித்தாரோ இல்லையோ இந்துக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது உண்மைதான்.
அதைப்போன்றே இப்போது இலங்கையில் புத்தர் சிலைகளில் இருந்து ஒளிக்கதிர்கள் வெளிவந்து கொண்டிருப்பதாகச் செய்தி பரவியிருக்கிறது. தலைநகர் கொழும்பிலும் புறநகர்ப்பகுதிகளிலும் தென்மாகாணத்தின் சில பகுதிகளிலும் புத்தர் சிலைகளை நோக்கி மக்கள் படையெடுத்திருப்பதை மாலை வேளைகளில் காணக்கூடியதாக இருக்கிறது. சிலைகளின் மார்புப் பகுதியில் இருந்து ஒளிக்கதிர்கள் வந்துகொண்டிருப்பதைக் கண்டதாகக் கூறியபலர் குறித்து பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

ஆர்ப்பரிக்கும் மக்கள் மத்தியில் காணப்படும் பௌத்த பிக்குமார்களில் பலரும் ஒளிக்கதிர்கள் வெளிவருவதாகக் கூறப்படுவதை உறுதிசெய்யவோ அல்லது நிராகரிக்கவோ முடியாதவர்களாக தாங்கள் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகக் கூறுகிறார்கள். பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரம் தொடர்பில் சர்ச்சை ஏதாவது மூளுவதாக இருந்தால் அது ஒளிக்கதிர்கள் மாயத்தோற்றமா அல்லது தெய்வீக அருநிகழ்வா என்பது பற்றியதாகவே இருக்கும்.

விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள் ஒளிக்கதிர் விவகாரத்தில் எந்தவிதமான தெய்வீக நிகழ்வுமே கிடையாது என்றும் அது வெறுமனே ஒரு மாயத் தோற்றமே என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். விஞ்ஞானப் பட்டதாரியான வண. பிட்டதுவ ஷ்ரீதம்ம தேரரும் இதைவெறும் ஏமாற்று என்றே வர்ணித்திருக்கிறார். மக்கள் இதனால் தவறாக வழிநடத்தப்படக் கூடாது என்று அவர் எச்சரிக்கையும் செய்திருக்கிறார்.

ஒரு பொருளை குறிப்பிட்டளவு நேரத்துக்கு ஒருவர் உற்று நோக்கிக் கொண்டிருக்கும்போது அவர் அப்பொருளை உள்ளவாறாக காணமாட்டார். வேறுபட்ட ஒன்றாகவே அப்பொருள் அவருக்குத் தோன்றும். அதேபொருளை அவர் இன்னொருவருக்கு காண்பிக்கும்போது அந்நபரும் அதேமனநிலையில் நோக்குவாரேயானால், விளைவு ஒன்றாகவேயிருக்கும் என்பதே பௌதீகத்துறை பேராசிரியர்கள் சிலர் அளித்திருக்கும் விளக்கமாகும். குறிப்பிட்ட நிறங்களை ஒருவர் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போது கண்ணின் கலங்களின் தூண்டுதல் காரணமாக நீல நிற மாயத்தோற்றத் (ஓப்டிcஅல் இல்லுசிஒன்)தை அவர் காண்பதற்கான சாத்தியம் உண்டு என்றும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஒளிக்கதிர் விவகாரம் குறித்து சர்ச்சை எதையும் கிளப்புவதற்கு நாம் விரும்பவில்லை. ஆனால், நாடு மீண்டும் முற்று முழுதான போருக்குள் தள்ளப்பட்டு இருண்ட யுகத்திற்குள் பிரவேசிக்கக்கூடிய அபாயகரமான நிலைமை தோன்றியிருக்கும் இவ்வேளையில், புத்தர் சிலைகளில் இருந்து வெளிவருவதாகக் கூறப்படும் ஒளிக்கதிர்கள், புத்தர் உலகிற்குத் தந்த உண்மையான `ஒளி' குறித்து கருத்துப் பரிமாறுவதற்கு ஒரு வாய்ப்பை எமக்குத் தந்திருக்கிறது.

கௌதம புத்தர் அட்டணங்காலிட்டு அமர்ந்து சாந்தமே உருவாக தியானஞ் செய்வது போன்றமைந்த உருவச்சிலைகளின் தோற்றம் உள்மன அமைதியினதும் வெளி அமைதியினதும் குறியீடாகவே கருதப்படுகிறது. அமைதியின் இக்குறியீடு இலங்கையில் சர்வசாதாரணமாக எங்கும் காணப்படக் கூடியதாயிருக்கின்ற அதேவேளை, குறியீட்டுக்கு முற்றிலும் விரோதமான வகையிலேயே நாட்டு நிலைவரம் காணப்படுகின்றது.

பௌத்த மதம் எப்போதுமே சமாதானம் மற்றும் அகிம்சையுடன் சம்பந்தப்பட்டதாகவே இருந்துவந்திருக்கிறது. எந்த உயிரையும் கொல்லவோ அல்லது அதற்கு ஊறுவிளைவிக்கவோ கூடாது- சகல உயிர்களையும் காக்க வேண்டும் என்பதே பௌத்த மதத்தின் முதன்மைப் போதனையாகும். சமாதான வழிமுறைகளுக்குப் புறம்பாக தங்களின் இலக்குகளை அடைவதற்கு அவ்வப்போது பௌத்தர்கள் நாட்டம் காட்டியிருக்கிறார்கள் என்றபோதிலும், பௌத்தத்தின் பெயரில் உலகில் எந்தவொரு பெரிய யுத்தமும் நடத்தப்பட்டதாக வரலாறில்லை.

கௌதம புத்தர் அரசியல் குறித்தும் போர் மற்றும் சமாதானம் குறித்தும் தெளிவாகவே விளக்கமளித்திருக்கிறார். பௌத்த மதம் எந்தவிதமான வன்முறையையும் உயிரழிவையும் நியாயப்படுத்தியதில்லை. பௌத்த மதத்தின்படி நீதியான போர் என்று எதையுமே அழைக்க முடியாது. இன்று இலங்கையிலே புத்தபெருமானின் போதனைகளைப் பரப்புவதற்கென்றே வாழ்நாளை அர்ப்பணித்திருப்பதாகக் கூறித்திரியும் பௌத்த பிக்குமார்களில் பெரும்பான்மையானவர்கள் மீண்டும் போரைப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டை இருளுக்குள் வழிநடத்திச் செல்வதற்கு கங்கணம் கட்டிநிற்கும் இத்துறவிகள், புத்தர் சிலைகளில் இருந்து ஒளிக்கதிர்கள் வெளிவந்துகொண்டிருப்பதாகக் கூறப்படும் இச்சந்தர்ப்பத்திலாவது புத்தரின் போதனையின் உண்மையான `ஒளியை' நாடுவது குறித்துச் சிந்திக்கமாட்டார்களா?


-தினக்குரல்

1 கருத்து:

ரிஷி (கடைசி பக்கம்) சொன்னது…

சரியாக சொன்னீர்கள் பிருந்தன் !

சில விசயங்களில் உங்களோடு எனக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும் இந்த விஷயத்தை நான் பலமாக ஆதரிக்கிறேன்.

புத்த மதத்தை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள். அவர் ஒரு போதும் அவரை வழிபட சொல்லவேயில்லை.

ஆனால் இப்போது.....

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us