ஞாயிறு, செப்டம்பர் 03, 2006

பா.ம.க. மிரட்டலுக்கு பணியமாட்டேன்-குஷ்பு ஆவேசப் பேட்டி.

பா.ம.க. மிரட்டலுக்கு பணியமாட்டேன்; மணியம்மை வேடத்தில் நடித்தே தீருவேன்: குஷ்பு ஆவேசப் பேட்டி
நடிகர் சத்யராஜ் நடிக்கும் "பெரியார்'' படத்தை டைரக்டர் ஞானராஜசேகரன் எடுத்து வருகிறார். இந்த படத்தயாரிப்புக்கு தமிழக அரசு ரூ.95 லட்சம் நிதி உதவி கொடுத்துள்ளது. பெரியாரின் சமூக சீர்திருத்த கருத்துக்களை மக்களிடம் மீண்டும் எடுத்துச் சொல்லும் வகையில் படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் பெரியார் வேடத்தில் நடிக்கும் சத்யராஜ×க்கு ஜோடியாக நாகம்மை வேடத்தில் ஜோதிர்மயி நடித்துள்ளார். சத்யராஜ்-ஜோதிர்மயி சம்பந் தப்பட்ட காட்சிகள் பெரும்பாலும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன.

அடுத்து பெரியார் 2-வது திருமணம் செய்த மணியம்மை வாழ்க்கை தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. மணியம்மை வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று டைரக்டர் ஞானராஜசேகரன் தீவிரமாக ஆய்வு செய்தார். ஒவ்வொரு நடிகையின் முகத்தையும் கம்ப்ïட்டர் மூலம் தொகுத்து மணியம்மை முகத் துடன் ஒப்பிட்டுப் பார்த் தார்.

அப்போது மணியம்மை வேடத்துக்கு நடிகை குஷ்பு முகம் ஏற்றதாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த வாரம் மணியம்மை வேடத்தில் நடிக்க குஷ்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதையடுத்து மணியம்மை வேடத்தில் நடிக்க குஷ்பு சில ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிப்பதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்ட சபையில் பேசிய பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் இது பற்றி கூறுகையில், "தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கேவலப்படுத்தி பேசிய ஒரு நடிகை எப்படி மணியம்மை வேடத்தில் நடிக்கலாம்? இதை நாம் அனுமதிக்கலாமா?'' என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இது தொடர்பாக கூறுகையில், "மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பெரியார் படத்தில் சிக்கலுக்குரிய ஒரு நடிகையை திணிப்பது ஏதோ உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. குஷ்பு நடிக்க மக்களிடம் எதிர்ப்பு கிளம்பினால் அது ஒரு களங்கமாக மாறிவிடும். எனவே இதை தவிர்ப்பது நல்லது'' என்றார்.

பா.ம.க.,விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பு காரணமாக மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிப்பது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இதுபற்றி அறிந்ததும் குஷ்பு ஆவேசமானார். அவர் கூறியதாவது:-

கற்பு பற்றி முன்பு நான் சொன்ன விதத்தை -அர்த் தத்தை அவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள இயலாத அவசர புத்தி அவர்களுக்கு. எனவே தான் புரியாமல் என்னை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.

இப்போதும் அப்படித் தான் தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சினை எவ்வளவோ உள்ளது. அதை எல்லாம் விட்டு, விட்டு குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிப்பது மட்டும் தான் பிரச்சினை என்பது போல பா.ம.க. எம்.எல்.ஏ. சட்டசபையில் பேசி இருக்கிறார்.

பா.ம.க. எம்.எல்.ஏ.க்கு வேறு வேலை எதுவும் இல்லையா? அதனால்தான் என்னைப்பற்றி பிரச்சினையை கிளப்புகிறார். அவருக்கு வேறு பிரச்சினைகள் பற்றி கவலை இல்லை என்றுதானே அர்த்தம்.

பெரியார் படத்தைப் பொறுத்தவரை நான் மணியம்மை வேடத்தில் நடிக்கத்தான் போகிறேன். அதற்கு தயாராகி வருகிறேன். எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் சரி, நான் நடித்தே தீருவேன். ஒரு போது பின்வாங்க மாட்டேன்.

நான் தமிழ்நாட்டின் மருமகள். எனவே மணியம்மை வேடத்தில் நடிக்க எனக்கு முழு உரிமை இருக்கிறது. இந்த வேடத்தில் நடிப்பதன் மூலம் எனக்குத் தமிழ்நாட்டில் ஒரு அங்கீகாரம் கிடைத்து இருப்பதாக நான் நினைக்கி றேன்.

நடிப்புக்காக நான் பல பரிசுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் மணியம்மை வேடத்தில் நடிப்பதை பெரிய பரிசாக கருதி மகிழ்கிறேன்.

எந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்க வேண்டும். யார் எதிர்த்தாலும் சரி மணி யம்மையாக நிச்சயம் நான் நடித்தே தீருவேன். இதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.

சர்ச்சைகளை கிளப்பி விடு வதன் மூலம் படைப்பாளி களை கட்டிப் போட முடியாது. என் தேர்வை பிரச்சினை ஆக்குவது தேவையற்றது. எந்த ஒரு கேரக்டரிலும் நடிப்பையும் திறமையையும் தான் பார்க்க வேண்டும்.

ஒரு பெரிய தலைவர் வாழ்க்கை வரலாறு படத்தில் நான் நடிப்பது இதுதான் முதல் தடவை. இதற்காக நான் நிறைய "ஹோம்-ஒர்க்'' செய்துள்ளேன். அக்டோபர் மாதம் தொடங்கும் சூட்டிங்கை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு எதிர்ப்பு வருவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்களுக்கு பதில் சொல்லி இனி என் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை.

அவர்கள் என்ன பேச ஆசைப்படுகிறார்களோ பேசி விட்டுப்போகட்டும் நான் மணியம்மை கேரக்டரில் என் முழு கவனத்தையும் செலுத்தப் போகிறேன்.

மணியம்மை வேடத்துக்கு நான் 100 சதவீதம் பொருத்த மாக இருப்பதாக சத்ய ராஜ×ம், டைரக்டர் ஞான ராஜசேகரனும் தெளிவுபட கூறி விட்டனர். எனவே எதிர்ப்பு வருகிறது என்பதற் காக நான் பயந்து ஓடி விட மாட்டேன். மேலும் நான் கோழை அல்ல. மூலையில் முடங்கி அழ மாட்டேன்.

ஒவ்வொரு சமயமும் என்னை பிரச்சினைக்குள் சிக்க வைக்கிறார்கள். அவை ஒவ்வொன்றையும் நான் துணிச்சலுடன் எதிர் கொள்கிறேன். இது என்னை முன்பை விட வலுவாக்கு கிறது.

கடந்த ஆண்டு (2005) செப்டம்பர் 24-ந் தேதி நான் சொன்ன கருத்துக்காக பிரச்சினை உருவானது. இப்போது ஓராண்டு ஆகி விட்டது. இந்த ஓராண்டு நிறைவை கொண்டாட திட்டமிட்டுள்ளேன்.

எனக்கு இப்போது ஏற்பட்டி ருக்கும் பிரச்சினையை நானே எதிர்கொள்வேன். டைரக்டர் அனுமதித்தால் மணி யம்மை கதாபாத்திரத்தில் சொந்த குரலில்பேசவும் விரும்புகிறேன்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

சென்னையில் இன்று நடந்த ஒரு மருத்துவமனை தொடக்க விழாவில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரியார் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அதில் நடிப்பேன். பின் வாங்க மாட்டேன். நடித்தே தீருவேன். யார் என்ன பேசினாலும் எனக்கு கவலை இல்லை. எந்த மிரட்டலுக்கும் பயப் பட மாட்டேன். தற்போது வெளி நாடு செல்கிறேன். 10 நாட்கள் கழித்து திரும்புவேன்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.
விடுப்பு : Viduppu.com
31 Aug 2006
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us