
திம்பூர் (கர்நாடகா): கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு ஹோட்டலின் ஆண்கள் கழிப்பறையில் மகாகவி பாரதியாரின் படத்தைப் போட்டு அவரை அவமரியாதை செய்துள்ளனர்.
சுதந்திர வேட்கையைத் தூண்டும் எண்ணற்றப் பாடல்களைப் புனைந்தவர் மகாகவி பாரதி. தமிழகத்தில் அவரது பாடல்களைக் கேட்டு ஆயிரக்கணக்கானோர் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
வெள்ளையர் கண்களில் விரலை விட்டு ஆட்டியவை மகாகவியின் தேச பக்திப் பாடல்கள். தேச ஒற்றுமைக்காக அவர் எழுதிய பாடல்கள் இன்றளவும் நாட்டுக்கு உபயோகரமாக உள்ளன.
அவரை கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல்காரர்கள் அவமானப்படுத்தியுள்ளனர். திம்பூர் அருகே உள்ள கிப்னஹள்ளி கிராஸ் என்ற இடத்தில் மயூரா என்ற ஹோட்டல் உள்ளது.
இந்த ஹோட்டலின் ஆண்கள் கழிப்பறையின் முகப்பில் மகாகவி பாரதியாரின் கம்பீரப் படத்தைப் போட்டு அவரைக் கேவலப்படுத்தியுள்ளனர். மகாகவியை அறிந்தவர்கள் இதைப் பார்த்து மனம் கொதித்துப் போயுள்ளனர்.
இதுகுறித்து ஹோட்டலின் கழிப்பறையை காண்டிராக்டுக்கு எடுத்திருப்பவர்களிடம் கேட்டால், இவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது. ஆண்கள் கழிப்பறை என்பதை குறிப்பிடும் வகையில் இந்தப் படத்தை இங்கே வைத்துள்ளோம் என்கின்றனர் படு கூலாக.
பாரதியாருக்கு நேர்ந்துள்ள இந்த அவமரியாதையை அந்த ஹோட்டலுக்கு வந்த அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தட்டிக் கேட்காதது ஏன், தடுத்து நிறுத்தாது ஏன் என்று புரியவில்லை.
தமிழர்களுக்கு மட்டும் இது அவமானமல்ல, ஒரு மாபெரும் கவியை கேவப்படுத்தியதன் மூலம் இந்தத் தேசத்தையும் அவமானப்படுத்தியுள்ளனர் அந்த ஹோட்டல்காரர்கள்.
உரியவர்கள் கவனித்து மகாகவிக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
http://thatstamil.oneindia.in/news/2007/06...harathiyar.html