வியாழன், பிப்ரவரி 15, 2007

ரஜனியின் வீரம் சினிமாவில் மட்டும் தானா? - ஒரு உண்மைத் தகவல்.





-குமுதம்ரிப்போட்டர்-

லண்டன் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சியை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட முடியாது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தி நடிகை ஷில்பாஷெட்டியை இனவெறி உணர்வோடு கொச்சைப்படுத்தியதற்கு எதிராக உலகம் முழுவதுமிருந்தும் மனித நேய உணர்வாளர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்கள்.

அப்படி ஒரு ‘அவமானப்படுத்தும்’ நிகழ்ச்சி தமிழ்ப் பெண்மணி ஒருவருக்கும் நடந்துள்ளது.

அந்த நேரத்தில் அங்கேயிருந்த நமது ‘சூப்பர் ஸ்டார்’ அதைக் கண்டிக்காதது மட்டுமல்ல, நமக்கெதற்குப் பிரச்னை’ என்று நழுவிக் கொண்டு விட்டார் என்பதுதான் வேதனை. சினிமாவில் மட்டுமே அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சூப்பர் ஸ்டார், நிஜத்தில் இப்படி ஒதுங்கிக் கொண்ட அதிர்ச்சித் தகவல் நமக்குக் கிடைத்தது. அதையடுத்து விசாரிக்கத் தொடங்கினோம்.

சென்னை தி.நகரில் பிரபலமாக இயங்கி வருகிறது மில்லேனியம் சாப்ட்வேர் நிறுவனம். இதன் தலைமையகம் இருப்பது அமெரிக்காவில். தமிழகத்தைச் சேர்ந்த சிவா அய்யாத்துரை என்பவர்தான் சென்னைக் கிளையை வழி நடத்தி வருகிறார்.

இவரது சகோதரி டாக்டர். உமா தனபாலன். இவர் குளோபல் ஹெல்த் அண்ட் ஹைஜீனிக் சொல்யூஷன் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். இவர்களது ஒட்டுமொத்த குடும்பமும் அமெரிக்காவில்தான் வசித்து வருகிறது. பணத்திற்கும் செல்வாக்கிற்கும் குறைவில்லாத கௌரவமான குடும்பம். எப்போதெல்லாம் தாய்நாட்டின் நினைவு வருகிறதோ, அப்போதெல்லாம் சென்னைக்குப் பறந்து வருவார்கள். ஓரிரு வாரம் தங்கியிருந்து விட்டு அமெரிக்காவிற்குத் திரும்புவார்கள். அதேபோன்று அண்மையில் சென்னைக்கு வந்த சிவா அய்யாத்துரையும் டாக்டர் உமா தனபாலனும் கடந்த ஆறாம் தேதி அமெரிக்கா செல்ல இருந்தார்கள். அதற்காக லூப்தான்ஸா ஏர்வேஸ் விமானத்தில் டிக்கெட் வாங்கியிருந்தார்கள். 6_ம் தேதி அதிகாலை 1.50 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றவர்களுக்குத்தான் அப்படியரு அவமானம் நடந்திருக்கிறது.

விமானமேறச் சென்ற டாக்டர் உமாவுக்கும் லூப்தான்ஸா ஏர்வேல் நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் தொடங்கி, ஒரு கட்டத்தில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் அளவிற்குப் பிரச்னை நீண்டு விட்டிருக்கிறது.

இது பற்றி டாக்டர். உமாவிடம் பேசினோம். ‘‘சென்னையில் சில நாட்கள் இருந்து விட்டுப் போகலாம் என்பதற்காக தம்பி சிவாவுடன் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்தேன். கடந்த மூன்றாம் தேதி அமெரிக்கா செல்வதற்காக லூப்தான்ஸா ஏர்வேஸ் விமானத்தில் ‘டிக்கெட்’ ரிசர்வ் செய்தேன். ஆனால், கடும் முதுகுவலி காரணமாக அன்றைய தினம் புறப்பட்டுப் போக முடியாத சூழ்நிலை. ஆகவே பயணம் வேண்டாம் என முடிவெடுத்தேன்.

எனவே, மூன்றாம் தேதியன்று ரிசர்வ் செய்திருந்த டிக்கெட்டை ஆறாம் தேதிக்கு மாற்ற விரும்பினேன். அதற்காக லூப்தான்ஸா ஏர்வேஸ் நிறுவனத்துடன் பேசினேன். மூன்றாம் தேதிப் பயணத்தை ஆறாம் தேதிக்கு மாற்றித் தரும்படி கோரினேன். விமான நிறுவன அதிகாரிகள் காரணம் கேட்டார்கள். எனக்கு உடம்பு சுகமில்லை என்பதை எடுத்துக் கூறினேன். ‘அப்படியென்றால் தகுந்த மருத்துவச் சான்றுகளோடு வாருங்கள்’ என்று கூறினார்கள் ‘அதில் ஒன்றும் பிரச்னை இருக்காதே?’ என்று கேட்டேன். ‘அதெல்லாம் ஒன்றுமில்லை. வாருங்கள்!’ என்றார்கள்.

அதன்படி ஐந்தாம் தேதி இரவு பதினொரு மணிக்கு மேல், விமான நிலையம் சென்றேன். லூப்தான்ஸா ஏர்வேஸ் நிர்வாகிகள் போர்டிங் கிளியரன்ஸ் கொடுப்பதற்காக பயண ஆவணங்களைச் சரி பார்த்தார்கள். அதற்கான பொறுப்பு அதிகாரியாக அனுப்குமார் என்பவர் இருந்தார்.

என்னிடமிருந்த பயண ஆவணங்களைச் சரி பார்த்தவர், ‘மூன்றாம் தேதி டிக்கெட் எடுத்து விட்டு அதை ஆறாம் தேதிக்குத் தள்ளிப்போட்டது ஏன்?’ என்று கேட்டதுடன் அதற்காக இருநூறு டாலரை அபராதமாகக் கட்டச் சொன்னார். ‘பணத்தைக் கட்டினால்தான் பயணிக்க முடியும்’ என்றார்.

அந்தப் பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘முறைப்படி உங்கள் நிறுவனத்திற்குத் தகவல் கொடுத்து விட்டுத்தான் மாற்றினேன். எனக்கு உடம்பு சரியில்லை என்ற தகவலைச் சொன்னதால் மருத்துவச் சான்றோடு வரச் சொன்னார்கள். ஆக, முன்கூட்டியே உரிய முறையில் தகவல் கொடுத்து சரியாக நடந்து கொண்ட நான், எதற்காக அபராதம் கட்ட வேண்டும்?’ என்று கேட்டேன்.

அது மட்டுமல்ல, ‘உங்கள் லூப்தான்ஸா நிறுவனம் ‘இந்த அபராதம்’ பற்றி ஏதும் கூறவில்லை. மருத்துவச் சான்றிதழோடு வந்தால் பிரச்னை இருக்காது என்றுதான் கூறினார்கள்!’ என்பதையும் வலியுறுத்திப் பேசினேன்.

ஆனால், நிர்வாகி அனுப்குமார் நான் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. அபராதம் கட்டினால்தான் போக முடியும் என்பதை கடினமான வார்த்தைப் பிரயோகத்தோடு பேசினார்!’’ என்று ஆதங்கப்பட்டவர்.

‘‘எனக்குப் பணம் முக்கியமல்ல. நியாயம்தான் முக்கியம். ‘பயணிகளுக்குச் சரியான தகவலைச் சொல்லாமல் உங்கள் விருப்பத்திற்கு அபராதம் என்பது என்ன நியாயம்? ‘என்றுதான் பேசினேன். ஆனால் அந்த அனுப்குமார் தொடர்ந்து என்னை பிளாக் லேடி, யூஸ்லஸ் ஃபெலோ. நான்சென்ஸ் என்று மோசமான வார்த்தைகளைச் சொல்லித் திட்டியபடியே இருந்தார்.

ஒரு கட்டத்தில் ‘அபராத பணத்தைக் கட்டு’ அல்லது திரும்பிப்போ. இப்படியே பேசிக்கொண்டிருந்தால் போலீஸ§க்குத் தகவல் கொடுத்து உன்னைத் தீவிரவாதி எனக்கூறி ஒப்படைத்துவிடுவேன். அதனால் ஏகப்பட்ட பிரச்னை வரும். அது தேவையா? என்பதை யோசித்துக்கொள்’ என்று மிரட்டலாகவும் பேசினார்.

இதற்குள் எனது சகோதரர் சிவா குறுக்கிட்டு, ‘நீங்கள் பேசுவதில் நியாயமில்லை’ என்று வாதிட்டார். உடனே அனுப்குமார் அவர் மீது பாய்ந்து நெட்டித்தள்ளி தரக்குறைவாகப் பேசியதோடு டிக்கெட், மருத்துவச் சான்றிதழ் உள்ளிட்டவைகளைத் தூக்கி, முகத்தின்மீது வீசுவதுபோல் விசிறியடித்தார்கள். நான் அப்படியே ஸ்தம்பித்துப் போனேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அங்கே வரிசையாக நின்றுக்கொண்டிருந்த அத்தனைபேர் மத்தியில் எனக்கு இந்த அவமானமா? என்று கண்கலங்கிப்போனேன். அப்படியே கீழே வீசப்பட்ட டிக்கெட், மற்ற ஆவணங்களைக் குனிந்து எடுத்தபடி நிமிர்ந்தபோது ஆச்சர்யம்! என் எதிரே சூப்பர் ஸ்டார் ரஜினி நின்று கொண்டிருந்தார். அவரும் அதே விமானத்தில் அமெரிக்கா செல்ல வந்திருந்தார் போலிருக்கிறது. (சிவாஜி ஷ¨ட்டிங்கிற்காக அன்று அவர் அமெரிக்கா சென்றார்!)

ரஜினியைப் பார்த்ததும் எனக்கு ஓர் ஆறுதல் ஏற்பட்டது. நியாயம் தெரிந்த மனிதர். அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கக்கூடியவர். இப்படிக் காரணமே இல்லாமல் ஓர் அவமானத்தை என் மீது திணித்ததை இவ்வளவு நேரமும் பார்த்துக் கொண்டிருப்பவர். நிச்சயம் இதைத் தவறு எனத் தட்டிக்கேட்பார் என்று நினைத்தேன். ஆதங்கத்தோடு அவரிடம் பேசினேன்.

நடந்ததையெல்லாம் மீண்டும் என் பங்கிற்கு அவரிடம் எடுத்துச் சொல்லி, இதில் என் தரப்பில் என்ன தவறு இருக்கிறது? பார்த்துக் கொண்டிருக்கும் நீங்களாவது இதைத் தட்டிக் கேட்கக்கூடாதா?’ என்றேன். அவரோ, பரவாயில்லம்மா. அபராதத் தொகையைக் கட்டிவிட்டு, விமானத்தினுள் செல்லுங்கள் மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளுங்கள்!’ என்ற பதிலையே ஆறுதல் போன்று கூறினார். கண்ணெதிரில் ஓர் அநீதி நடக்கிறது. யாரும் இதைத் தட்டிக்கேட்கமாட்டேன் என்கிறார்களே என்று எனக்கு ஆதங்கம் இருந்தது.

பிரச்னை இப்படியே நீடித்தால் போலீஸ¨க்குத் தகவல் கொடுத்து, எங்கள் மீது புகார் கொடுத்தார் நிர்வாகி. நாங்களும் வேண்டிய உயர் அதிகாரிகளுடன் பேசி நடந்ததை விளக்கி, காவல் நிலையத்தில் அவர்கள் மீது பதில் புகார் கொடுத்தோம். அதோடு லூப்தான்ஸா ஏர்வேஸில் இனிமேலும் பயணம் செய்யக்கூடாது என்று பயணத்தை ரத்து செய்துவிட்டேன். அடுத்த நாள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விமானத்தில் டிக்கெட் எடுத்துத்தான் அமெரிக்கா வந்தோம்.

எங்களை அவமானப்படுத்தி தவறான வார்த்தைகளால் பேசிய அந்த நிர்வாகிகள் மீது, அதன் அமெரிக்கத் தலைமையகத்தில் புகார் கொடுக்க உள்ளோம். அதுமட்டுமல்ல! நிறுவனத்தின்மீதும், நிர்வாகிகள் மீதும் கன்ஸ்யூமர் கோர்ட்டிலும் வழக்கு போட உள்ளோம்!’ என்று குமுறித் தீர்த்தார் உமா.

இது குறித்து மீனம்பாக்கம் விமான நிலைய காவல்நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு இன்ஸ்பெக்டர் முகிலனிடம் பேசினோம். ‘‘ஆமாம்! பிரச்னை நடந்தது உண்மைதான். அனுப்குமார் தரக்குறைவாகப் பேசியதாக உமா புகார் கொடுத்துள்ளார்! அதேபோல லுப்தான்ஸா ஏர்வேஸ் நிர்வாகியும் புகார் தெரிவித்துள்ளார். இதுபற்றி இனிமேல்தான் விசாரிக்க வேண்டும்!’’ என்றார்.

தொடர்ந்து லுப்தான்ஸா ஏர்வேஸ் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு பேசினோம். ‘‘சம்பந்தப்பட்ட அதிகாரி இப்போது டூட்டியில் இல்லை’’ என்ற பதிலைத் தெரிவித்து நழுவிக் கொண்டார்கள்.

கண் எதிரே ஒரு பெண்ணுக்கு நடந்தேறிய சம்பவத்தை சூப்பர் ஸ்டார் எப்படி கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்த்தார்? ஜீரணிக்கவே கஷ்டமாகத்தான் இருக்கிறது!


நன்றி:-குமுதம் ரிப்போட்டர்
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us