
சுனாமி ஆசியாவைத் தாக்கி அயிரக்கணக்கானவர்களைப் பலி கொண்ட போது நாங்கள் எல்லோரும் அழுதோம்.
சுனாமி ஆசியாவைத் தாக்கிய போது முப்பதாயிரம் பேர் உடனடியாக மாண்டனர். கடலால் அடித்துச் செல்லப்பட்ட அந்தக்கணத்திலேயே அவர்கள் தங்கள் தங்கள் மூச்சை நிறுத்திக் கொண்டனர். அவர்களுடைய இறுதி அத்தியாயம் மிகச் சுருக்கமானது.
பிரதானமான தொலைக்காட்சி நிறுவனங்களின் செய்தி அலைவரிசைகள் வாரத்தின் ஏழு நாட்களும் நாளின் 24 மணித்தியாலங்களும் சுனாமியின் கோரத்தைக் காட்டிக் கொண்டே இருந்தன. நாங்கள் உதவிப் பொருட்களைப் பொதி பண்ணி அருகிலுள்ள தேவாலயத்திற்கு அல்லது பாடசாலைக்கு எடுத்துச் சென்றோம். உலகின் பல நாடுகள் பில்லியன் கணக்கான உதிவியைச் செய்தன.
ஆனாலும் இன்னமும் தமிழ் மக்கள் கண்ணீருடன் இரண்டாம் தரப் பிரஜைகளாகத் தான் இருக்கின்றனர்.
இப்போது இலங்கையின் படுகொலைக்களத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும் சிறுவர்களும் வலிமிகுந்த மரணத்தை எதிர்கொண்டிருந்த போது உலகம் தொடர்ந்தும் மௌனமாக இருந்தது.
இன்னொரு பேரழிவு அண்மையில் இலங்கைத் தமிழர்களைத் தாக்கியது. அது பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்டு நடாத்தப்பட்ட போராக இருந்தது. மனித குல வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான துரோகத்தனமிக்க போராக இது இருந்தது. இதில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். முப்பதாயிரம் பேர் அங்கவீனர்களாக்கப்பட்டனர்.
கண்ணீர்த்துளி போன்ற இந்தத் தேசத்தில், சுனாமி ஏற்படுத்தய அழிவை விட அதிகமான பேரழிவை இந்த யுத்தம் ஏற்படுத்தியது.
மாதக்கணக்காக உணவும் மருந்தும் இன்றி ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் பதுங்கு குழிகளுக்குள்ளேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். சீனாவின் எப்.7 விமானங்களிலிருந்தும், ரஸ்யாவின் மிக் விமானங்களிலிருந்தும் பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் பொது இடங்களில் போடப்பட்ட குண்டுகளால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
கனரக ஆட்லறிகளும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களும் இந்த நிர்க்கதியான மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டது. பலர் வலிமிகுந்த மரணத்தை எதிர்கொண்டார்கள். காயமடைந்த பொதுமக்கள் தற்காலிக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது அவ்வைத்தியசாலைகள் குண்டுவீச்சுக்கிலக்கானதில் கொல்லப்பட்டனர். நோயாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேண்டுமென்றே உணவும் மருந்தும் மறுக்கப்பட்டன. பயங்கரங்;களுக்கு மேலாகத் தொடர்ந்து வந்த பயங்கரங்களுக்கெல்லாம் பெண்களும் சிறுவர்களும் சாட்சியமானாhர்கள்.
உலகின் சில அதிகார சக்திகளின் பின்னணியுடன் மனிதரால் உருவாக்கப்பட்ட இந்த சுனாமிக்கு மேற்கின் செய்தி அலைவரிசைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஊடக மற்றும் விளையாட்டுப் பிரதிநிதிகள் ஆசியா மற்றும் ஆபிரிக்காவிலிருந்து வறுமையை ஒழிப்பது பற்றித் தொடர்ச்சியாகப் பேசி வந்தார்கள். ஆனால் இந்த அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்காக ஒரு சுண்டு விரலைத் தானும் அவர்கள் அசைக்கவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதில் ஐநாவின் ஊழல் மிகுந்த தலைவர்கள் தமது கடமையில் தவறி இருந்தார்கள். அவர்கள் தவறானவர்களால் வழி நடத்தப்பட்டார்கள். அவ்வறான தாளத்திற்கு அவர்கள் ஆடினார்கள். ஐநாவும் ஏனைய சர்வதேச அமைப்புக்களும் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கான சாத்தியமிருந்தும் அவர்கள் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொள்ளும் இந்த மர்ம விளையாட்டின் ஒரு பகுதியினரானார்கள். இந்த அழிவைத் தடுத்து நிறுத்துவதற்கான சக்தி பலரிடம் இருந்தும் அவர்கள் அதனைச் செய்யவில்லை. ஏனெனில் அவர்களுக்கு அதனைச் செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை.
பல நாடுகளின் தலைவர்களும் ராஜதந்திரிகளும் இந்தப் போரின் போது எவ்வாறு செயற்பட்டார்கள் என்று பார்த்தால் அது குறித்து பலத்த சந்தேகம் எழும். அவர்களில் பலர் இந்த உலகத்தில் இல்லாதவர்கள் போன்று செயற்பட்டும் எழுதியும் இருப்பார்கள்.
ஐநா செயலாளர் நாயகம் உட்படப் பல தலைவர்கள் தங்களது வாய்களை மூடிக்கொண்டிருந்தார்கள். எப்போதாவது மட்டும் ஓரிரு வார்த்தைகளை உதிர்த்தார்கள்.
ஐநாவின் தலைமை அதிகாரியான விஜய் நம்பியார் உட்பட ஐநாவின் பல பிரதிநிதிகளும் போர் நிறுத்தம் குறித்துப் பேச இலங்கைக்குப் பலமுறை சென்றிருந்தாலும், அவர்களுக்கான பல தனிப்பட்ட நலன்கள்; அவர்களிடம் இருந்ததன் காரணத்தால் அதில் அவர்கள் தோல்வியடைந்தார்கள்.
அவர்கள் தாம் வகிக்க வேண்டிய பாத்திரத்தை வகிக்காதது மட்டுமல்ல மனிதத்திற்கெதிராக நடாத்தப்பட்ட மாபெரும் குற்றங்களுக்கு முழுமையான ஆதரவளிப்பவர்களாகவும் ஆகியிருந்தார்கள்.
இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் செய்த சில இந்தியத் தலைவர்கள் இலங்கையின் போருக்கு பின்னணி பாடியதோடு, போரின் முன்னேற்றங்கள் குறித்து கவனம் செலுத்தி இலங்கை அதிகார பீடங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்களேயன்றி போர் நிறுத்தத்தைக் கொண்டு வரவோ, போரை நிறுத்தவோ, பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்தோ பேசமுற்படவில்லை. அவர்கள் எப்போதும் போராளித் தலைவரின் அழிவு பற்றியும், அவருடைய மரணம் பற்றி உறுதிப்படுத்தப்படக் கூடிய ஒரு சிறிய ஆவணம் பற்றியும் மட்டுமே பேசினார்கள்.
இந்தப் போர், இந்தப் பிராந்தியத்தில் தனது இராணுவ தந்திரோபாயமும் என்பதையோ, இலங்கைக் கடலில் காணப்பட்ட எண்ணெய்ப்படுக்கைகளுக்குள் தான் நுழைவதற்கான வழி இது தான் என்பதையோ மூடி மறைத்து ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவே இது இருந்தது.
இலங்கைக்கு விஜயம் செய்தவர்களில் மனித உரிமைகளைக் காப்பாற்றுவதில் உண்மையாகவே செயற்படுபவரக டேவிட் மிலிபான்டே விளங்கினார். பொது மக்களுக்கு எதிராக கனரக ஆயுதங்களையும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் இலங்கை பாவிப்பதால் ஏற்படும் இழப்புகளை அவர் எதிர்த்து நின்றார். டேவிட் மிலிபான்டைப் போன்று இலங்கையின் மனித உரிமை மீறல் நடவடிக்கையை யார் எதிர்த்து நிற்கிறாரோ அவர் இலங்கையால் வெள்ளைப் புலி என்றோ மஞ்சள் புலி என்றோ அல்லது மண்ணிறப் புலி என்றோ அவர்களின் தோல் நிறத்தைக் கொண்டு அழைக்கப்பட்டார்.
பயங்கரவாதத்திற்கெதிரான போர் முடிவடைந்து விட்டது. ஆனால் கொலைகள் நிறுத்தப்படவில்லை.
கிளர்ச்சித் தலைவரையும் கொன்று அவருடைய குழுவினரையும் பெருமளவுக்கு அழித்துவிட்டதாக இலங்கை ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களுடைய கூற்றுப்படி பயங்கரவாதம் அங்கு பூண்டோடு துடைத்தெறியப்பட்டு விட்டது.
ஆனால் அங்குள்ள கள நிலைமைகள் வேறு மாதிரியாகச் சொல்கின்றன. பேர் முடிந்து விட்டது. ஆனால் படுகொலைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இலங்கை அரசாங்கம் தமிழர்களை விட்டுவிடவில்லை. ஒவ்வொரு தமிழ் ஆணும் பெண்ணும் குழந்தையும் கூட சந்தேகக்கண் கொண்டே பார்க்கப்படுகிறார்கள். அவசரகாலச்சட்டவிதிகளின் கீழ் சந்தேகத்திற்குள்ளாகும் எவரையும் கைது செய்யவும் கொலை செய்யவும் இலங்கைப் படையினருக்கு அதிகாரம் இருக்கிறது.
இலங்கையில் தமிழராக வாழ்தல் என்பது கருநாகங்கள் கொண்ட மிக ஆழமான பள்ளத்தாக்கிற்கு மேலாகக் கட்டப்பட்டுள்ள ஒரு மெல்லிய கயிற்றில் நடப்பதைப் போன்றது தான்.
பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்று சொல்லப்பட்ட போரும் மனிதாபிமான நடவடிக்கையும் இப்போது முடிவடைந்து விட்டன. ஆனால் படுகொலைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. யாராவது ஒருவர் கேட்கக்கூடும் அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட போரின் நோக்கம் நியாயமானது தானே என்று. இல்லை. ஆக ஒரேயொரு கிளர்ச்சித் தலைவரை வெறுமனே வெட்டிச் சாய்ப்பதற்காக ஆகாயத்திலிருந்து குண்டுகளை வீசியும் ஐம்பதாயிரம் மக்களைக் கொன்றும் முப்பதாயிரம் மக்களை அங்கவீனர்களாக்கியும் சிங்கப்பூரைப் போன்ற பரப்பளவுள்ள இரண்டு மடங்கு பிரதேசத்தை அழித்து துவம்சம் செய்துமுள்ளதைப் போன்ற ஒரு அரசாங்கள் இந்த உலகில் வேறில்லை.
தமிழர்களைக் கொல்லுதல் என்பது 1948இல் இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இலங்கையிலுள்ள தமிழ் சமூகத்தினருடைய கோரிக்கைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஆக்கபூர்வமான திட்டம் எதுவும் இதுவரை இலங்கை அரசாங்கத்திடம் இல்லை.
தமிழர்கள் மீதான படுகொலையை குறித்து உலகம் எவ்வாறு பதில் சொல்கிறது?
47 நாடுகள் இணைந்து ஒன்றாக இலங்கைப்பிரச்சினை மீது வாக்களித்துள்ளன. அவற்றில் பெரும்பான்மையான நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. இலங்கைப் பிரச்சினை ஒரு உள்நாட்டுப் பிரச்சினை என்ற கோணத்திலிருந்தே அவை அவ்வாறு வாக்களித்துள்ளன. அவ்வாறு வாக்களித்ததனூடாக அவை இலங்கை அரசாங்கத்தின் புலிகள் மீதான வெற்றியைப் பாராட்டியுள்ளதோடு இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் மீதான விசாரணையையும் புறந்தள்ளியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் தனது நன்மதிப்பை தற்போது இழந்து போயுள்ளது. அந்த அங்கம் எதற்காக உருவாக்கப்பட்டதோ அதைத் தொலைத்துவிட்டு அதற்கான இருப்பிற்கான அர்த்தத்தையே இழந்து நிற்கிறது.
இலங்கைக்கு ஆதரவளித்த பெரும்பான்மையான நாடுகளின் செய்தி மிகத் தெளிவானது. தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் என்ன செய்கிறது என்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு தோளோடு தோள் கொடுத்து உதவி செய்வோம். ஏனென்றால் எங்களது பகுதிகளிலுள்ள மறைவிடங்களிலும் இவ்வாறான எலும்புக்கூடுகள் உள்ளன. ஆகவே அப்பாவிப் பெண்களையும் சிறுவர்களையும் அவர்கள் குண்டு போட்டுக் கொல்ல நாங்கள் அனுமதிப்போம். அவர்கள் பட்டினியால் மரணமடைய நாங்கள் அனுமதிப்போம். காயமடைந்தவர்களுக்கு மரு;துகளைத் தடை செய்வதை நாம் அனுமதிப்போம். ஏன் எல்லாத் தமிழர்களையும் கொன்று பெரும் குழிகளில் போட்டு மூடினாலும் அதனையும் அனுமதிப்போம். இவ்வாறான ஒரு பயங்கரமான தீவுக்கு நாங்கள் இன்னமும் எங்கள் ஆதரவைத் தெரிவிப்போம் ஏனென்றால் இந்தப் பிராந்தியத்தில் எங்களுக்கு எங்களுடைய சொந்த நலன்களும் மறைக்கப்பட்ட பல உள்நோக்கங்களும் உண்டு.
இது தான் உலகில் உள்ள நாடுகளின் நிலை இன்று. இந்த நாடுகள் நீண்டகாலமாகவே மனித உரிமைகள் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்கள் தங்களது பேராசையைப் பூர்த்தி செய்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளார்கள்.
அவசரகால நிலைமைகளின் போது பெரும்பான்மையானவர்கள் உயிர்களைக் காப்பாற்றுவதில் அக்கறையற்று தமது சொந்த நலன்களில் அக்கறை செலுத்தும் அழிவுக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் போது வாக்களிப்பு என்பது சிறந்தவொரு வழிமுறையாக இருக்குமா என்று நான் பல தடவைகளில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் தருணத்தில் வாக்களிப்பை நடாத்தி, பின்னர் வாக்களிப்பில் பெரும்பான்மையானவர்கள் அங்கு போய் அதற்குள் இருப்பவர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் ஈடுபாடு காட்டாத காரணத்தால் அதனைக் கைவிடுவது என்பது நியாயமானதாக ஆகிவிடாது.
மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் இருந்து பயணிகளைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் வாக்கெடுப்பு நடாத்துவதில்லை. மக்களைப் பாதுகாப்பதா இல்லையா என்பது அங்கு பிரச்சினையாக இருக்காது. சில வேளைகளில் எப்படிப் பாதுகாப்பது என்பதில் வேறுபாடுகள் வரலாம்.
இலங்கையில் உள்ள நாசி காலத்து சித்திரவதை முகாம்களை ஒத்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு துஸ்பிரயோகம் செய்யப்படும் அப்பாவி மக்களைப் பாதுகாப்பது குறித்து மனித உரிமை ஆணையகம் இப்போதாவது விவாதிக்க வேண்டும். இல்லையேல் இது முழு மனிதகுலத்திற்கும் ஒரு பெருத்த அவமானம் மட்டுமல்ல ஒரு நாடு தனது நாட்டிலுள்ள சிறுபான்மையினரை முற்றாகவே துடைத்தழிப்பற்கு வழங்கும் ஒரு ஆமோதிப்பாகவும் அமைந்து விடும் அபாயமுள்ளது.
போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை மறைக்க புதிய வழிமுறைகளைக் கையாள்கிறது இலங்கை அரசு ‐ பகுதி 2 ‐ றிச்சார்ட் டிக்ஷன்
இந்த இரத்த ஆற்றை நாம் தடுத்திருக்க முடியாதா?
பதில் ஆம் என்பது தான். ஆனால் இந்தப் போரினால் அவர்களுக்குப் பல நன்மைகள் கிடைத்துள்ளன. அதனால் இந்தப் போரை நிறுத்துவதில்லை என்று அவர்கள் தீர்மானித்தார்கள். அதேவேளை பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் அதனை அதன் முடிவு வரை அனுமதிப்பது என்றும் அவர்கள் முடிவெடுத்தார்கள். இந்தியா சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகள் பாரம்பரியமாகவே நல்லுறவைக் கொண்டிருக்காத போதிலும் ஆச்சரியப்படத்தக்க வகையிலே நண்பர்களானர்கள். தமக்கான பங்கிறைச்சித்துண்டை கொத்திக் கொண்டு போகக் காத்திருக்கும் கழுகுகள் போல தமக்கிடையேயான உடன்பாட்டோடும் ஒரு மூர்க்கத்தனத்தோடும் காத்திருந்தார்கள்.
என்ன நடந்து கொண்டிருந்தது என்று எல்லோருக்கும் தெரியும். இழப்புக்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை உலகத் தலைவர்கள் கிரிக்கெட் வர்ணனை கேட்பது போல மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பழக்கப்பட்ட காரணத்தால் சிலர் இங்கும் அங்குமாக சில அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தார்கள்.
படுகொலைகளை நிறுத்துங்கள் என்று எவரும் உரக்கக் குரல் கொடுக்கவில்லை. அவர்களிடம் அதிகாரம் இருந்தது. ஆனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை.
அங்கு இடம்பெற்ற படுகொலைகளின் எண்ணிக்கையைக் கொண்டு கிரிக்கெட் ஓட்டங்களை அதன் அறிவிப்புப் பலகையில் புதுப்பிப்பது போன்று ஐநா புதுப்பித்துக் கொண்டிருந்தது. அந்த எண்ணிக்கை ஆயிரக்கணக்கைத் தாண்டிய போதும் ஐநா மௌனமாகவே இருந்தது. அவர்கள் வாயைத் திறந்து இதனைப் பற்றி எதுவும் பேசவில்லை.
ஐநாவின் சற்றலைட்டுக்கள் படங்களை எடுத்துக் கொண்டே இருந்தன. ஆனால் அந்த இரத்த ஆற்றைத் தடுத்து நிறுத்த அவை எந்தப் பிரயத்தனத்தையும் எடுக்கவில்லை. தேசங்களின் இதயங்கள் எல்லாம் கல்லாகி, உதவியேதுமின்றி சிதைந்தழிந்தன. அந்தப் பேராசைத்தனம் திருப்தி செய்யப்பட்டது.
மனித உரிமைக்காப்பாளர்களும், பெரும் ஊதியத்துடன் நியமிக்கப்பட்ட ராஜதந்திரிகளும் தங்களது காலையுணவை உண்ணுகையில் இலங்கையின் பயங்கரத்தைப் பற்றிக் கேள்வியுற்றார்கள். அவர்களுக்கு இந்தக் கதைகள் பெரும் சலிப்பூட்டுவனவாக இருந்தன. மனித உரிமை ஆய்வாளர்களும் நிபுணத்துவம் மிக்கவர்களும் அந்த உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஏதாவது செய்வதற்குப் பதிலாக இது தொடர்பான தங்களது ஆய்வுக்கட்டுரையை வெளியிடுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். மேற்கு நாடுகள் பல தமது குரல்களை உயர்த்தினாலும் அவர்களுடைய அறிக்கைகள் இந்த அழிவுப் போக்குடைய நிகழ்ச்சித்திட்டத்தைக் கட்டுப்படுத்துமளவுக்குப் பலமானவையாக இருக்கவில்லை.
வன்னியில் இறந்து கொண்டிருந்தவர்களின் உறவினர்கள் உலகின் பிரதான தலைநகரங்களின் தெருக்களில் இறங்கினார்கள். அவர்கள் முழந்தாளில் நின்று இந்த மன்னர்களிடமும் மகாராணிகளிடமும் அழுதார்கள். அவர்கள் தங்களுடைய எதிர்ப்பைப் பல்வேறு வழிகளில் காட்டினார்கள். அவர்களது அழுகையை நாங்கள் கேட்கவில்லை. ஆனால் அவர்களை எம்மைத் தொந்தரவு செய்பவர்களாகவே நாம் பார்த்தோம். ஏனென்றால் அவர்கள் எங்களது தெருக்களைத் தடை செய்தார்கள். நாங்கள் அவர்களது அழுகையைக் காது கொடுத்துக் கேட்டிருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.
எங்களுடைய வானொலிகள் அவர்கள் ஏன் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் அவர்களை எவ்வாறு அந்த வீதிகளிலிருந்து அப்புறப்படுத்துவது என்று பேசின. நாங்கள் இப்போது சந்தோசமாக இருக்கிறோம். ஏனென்றால் அங்கு எந்தத் தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களும் இல்லை. பாதுகாக்க முற்பட்ட பொதுமக்களும் இறந்து பட்டு விட்டார்கள்.
இது மிகத் தெளிவானது. இந்தப் போர் பலநாடுகளின் பெரும் துணையுடன் நடத்தப்பட்டிருக்கிறது. அவர்களால் இந்த இரத்த ஆற்றைத் தடுத்துநிறுத்தும் வகையில் இலங்கை அரசை இணங்கச் செய்திருக்க முடியும். குறிப்பாக கிளர்ச்சியாளர்கள் தாங்கள் சரணடைவதாக அறிவித்த பின்னராவது.
இந்த இரத்த ஆற்றைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும.; ஆனால் எவருக்கும் அதில் அக்கறை இருக்கவில்லை. ஏனென்றால் எல்லோரும் தத்தமது திட்டத்துடனேயே அங்கு சென்றிருந்தார்கள். அது முடிவுக்கு வர முன்னரே இந்தப் போரின் பங்குதாரர்கள் தமது அறுவடையைச் செய்ய ஆரம்பித்தார்கள்.
யார் இந்தப் போரால் நன்மையடைந்தார்கள்?
இந்தப்பிராந்தியத்தில் தங்களுடைய நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நினைக்கிற இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் கைப்பாவையாக இலங்கை அரசாங்கம் பயன்படுத்தப்பட்டது. இலங்கையிலிருந்து மெதுவாகத் துடைத்தழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழ்மக்கள் தவிர மற்றைய ஒவ்வொருவரும் இப்போது சந்தோசமாக உள்ளார்கள்.
கடந்த 60 வருடங்களு;க்கு மேலாகவே தமிழ் மக்களைக் கொன்று வரும் சிங்களத் தீவிரவாதிகள் இப்போது மகிழ்ச்சியடைவார்கள்.
உலகின் குழம்பிய குட்டையில் சீனா மீன்பிடிக்கிறது. தனது கொலைகார ஆயுதங்களை இன்னொருவருக்கு வழங்கி அவரை பலமிக்க மனிதனாக்கியதன் மூலம் அது மீண்டும் ஒரு தடவை தனது இலக்கை அடைந்துள்ளது. அதனது கடற்டையால் பயன்படுத்துவதற்கென கட்டப்படும் துறைமுகம் உட்பட பல்வேறு கட்டுமானத்திட்டங்களை சீனா இலங்கையின் தெற்குப் பகுதியில் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளது.
இந்தியாவும் ஏற்கெனவே போடப்பட்ட எண்ணெய் ஆய்வுத் திட்டத்தை ஆரம்பித்;துள்ளதோடு இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் தனது பல்வேறு திட்டங்களை ஆரம்பிக்க தனது நிபுணர்களை அனுப்பி வைத்துள்ளது.
சீனாவும் பாகிஸ்தானும் தமது கொலைகார ஆயுதங்களை இலங்கைக்குக் கொடுத்து போரை எவ்வாறு கொண்டு செல்வது என்றும் போரை எவ்வாறு நடாத்துவது என்றும் இலங்கை அரசு;கு உதவியிருக்கிறார்கள்.
இந்தியாவின் போரை தான் இலங்கையில் நடாத்தியதாக இலங்கை ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்தப் போரில் இந்தியாவின் கைகளில் இரத்தக்கறை படிந்துள்ளது என்று இந்தியாவின் முன்னாள் உயர் ஸ்தானிகர் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். எனினும் தமிழ் மக்களின் இக்கட்டான நிலை குறித்து இந்தியா கவலைப்படவில்லை.
இலங்கையின் போர் கிளர்;ச்சிக்குழுத் தலைவரை வைத்து எதுவும் செய்வதற்கல்ல. அவருடைய உடலுக்கு அப்பால் மிகப் பெரிய கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வெற்றிப் பேச்சுக்கள் ஒன்றும் மடத்தனமானவை அல்ல. அவையெல்லாம் அந்தந்தத் தரப்புக்களால் மிக நிதானமாகச் சிந்தித்துச் செய்யப்பட்ட பேச்சுக்களே. கம்பளத்திற்குக் கீழ் ஒளிந்து கொண்டுள்ள எல்லா நச்சுப் பாம்புகளின் பேச்சுக்களே அவை.
இலங்கையின் போர்க்குற்றங்கள்:
சதாம் ஹுசைன் குர்த்ஷ் மக்களுக்கு இழைத்ததைவிட பலமடங்கான போர்க்குற்றங்களை இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு இழைத்துள்ளது.
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த கிளர்ச்சிக்காரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்த பொதுமக்கள் கருணையற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இலங்கைப் படையினரால் மட்டுமல்ல, இலங்கை இந்திய அரசியல்வாதிகளாலும், ஐநா அதிகாரிகளாலும் மிகக் கடுமையான போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன.
அப்பாவிகளான ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் மீது தடை செய்யப்பட்ட கிளஸ்டர் மற்றும் பொஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. சர்வதேச செஞ்சிலுவைச்சங்கப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரே வைத்தியசாலை பலமுறை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. கட்டிடங்களும் சொத்துக்களும் மிகப் பலம்வாய்ந்த குண்டுகளினால் தகர்க்கப்பட்டுள்ளன.
அப்பாவி மக்கள் பதுங்குகுழிகளில் மாதக்கணக்காக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவும் மருந்தும் தடை செய்யப்பட்டிருக்கிறது.
இலங்கை இப்போதும் ஆதாரங்களை மறைத்துக் கொண்டிருக்கிறது:
ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்குப் புறம்பாக முப்பதாயிரம் பேர் காயமடைந்துள்ளனர். உண்மையான மனிதாபிமான அல்லது மீட்பு உதவிகள் எதுவும் கிடைக்கா வண்ணம் இன்னொரு மூன்று இலட்சம் பேர் இனவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்குத் தெரியும் தான் மிகப் பெரிய போர்க்குற்றங்களை இழைத்துள்ளேன் என்று. அதனால் இப்போது அந்த அக்கிரமங்களை மூடி மறைக்கும் பணியில் அது இறங்கியிருக்கிறது.
போர்ப்பிராந்தியத்திலிருந்து வெளியேறிய மக்களே இந்தக் கொடுமையான போர்க்குற்றங்களின் சாட்சியாளர்களாவர். அவர்கள் தமக்கு என்ன நடந்தது என்றும் தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் கண்ணால் கண்டவர்கள். இலங்கை அரசாங்கம் ஊடகவியலாளர்களையும் மனிதநேயப் பணியாளர்களையும் சுதந்திரமாக இந்த முகாம்களுக்கு அனுமதிக்காததன் முக்கிய நோக்கமே இந்தச் சாட்சியங்களை வெளிவரவிடாமல் தடுப்பதும் அவற்றை எவ்வாறாயினும் அழித்து விடுவதனூடாக தனது போர்க்குற்றங்களை மூடி மறைப்பதும் தான்.
வன்னியில் காயமடைந்த மக்களின் உயிர்களைப் பாதுகாத்த அந்த மூன்று வைத்தியர்களுமே உண்மையான வீரர்கள் என சர்வதேச சமூகத்தால் கணிப்பிடப்படுகிறார்கள். அவர்களுடைய அந்த முயற்சியை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக இலங்கை அரசாங்கம் தனது போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை மறைப்பதற்காக அவர்களைச் சிறையில் தள்ளிப் பூட்டியுள்ளது.
இந்தப் போர் இரண்டு வாரங்களுக்கு முன்னரே முடிவடைந்து விட்டது. ஆனால் இதுவரை போர்ப்பிராந்தியங்களுக்கு ஊடகவியலாளர்களோ உதவிநிறுவனப் பணியாளர்களோ செல்ல அனுமதிக்கப்படவில்லை.
போர் முடிவடைந்த விட்டது என்றும் அங்குள்ள மக்கள் யாவரும் மீட்கப்பட்டு விட்டார்கள் என்றும் இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதும், காயமடைந்து வீழ்ந்து கிடக்கின்ற பலர் இன்னமும் அங்கேயே கிடக்கிறார்கள். அதுமட்டுமின்றி வெளியே வர அஞ்சிய பலர் இன்னமும் பதுங்குகுழிகளுக்குள்ளேயே பதுங்கியிருக்கிறார்கள்.
புதைகுழிகள் இலங்கை அரசாங்கத்திற்கு பழைய வழிமுறைகளாகி விட்டன. போர்ப்பிராந்தியத்திற்கு இன்னமும் ஊடகவியலாளர்களோ அல்லது உதவி நிறுவனப் பணியாளர்களோ இலங்கை அரசால் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு மிக நீண்டகாலம் எடுக்கும். ஏனெனில் அங்கு இறந்துபட்டுக் கிடக்கும் ஆயிரக்கணக்கானவர்களின் இறந்த உடல்களை இராணுவத்தினர் அடையாளமின்றி அழித்துக் கொண்டிருக்கின்றனர்.
கிளர்ச்சித் தலைவரின் உடலைத் தகனஞ்செய்து சாம்பலை கடலில் எறிந்த விட்டதாகத் தெரிவிக்கும் இலங்கை ஆயுதப்படைகளின் தலைமையின் அண்மைய அறிவிப்பு இதேபோன்ற வழிமுறையையே அங்கு கொல்லப்பட்டுக் கிடக்கும் உடலங்களுக்கும் மேற்கொள்ளப்படும் என்பதைக் கோடி காட்டுகிறது. இலங்கைப் படைகள் அங்கு இடத்துக்கு இடம் எடுத்துச் சென்று உடல்களைத் தகனஞ் செய்யக்கூடிய உலைகளைப் பயன்படுத்தக் கூடும். இதன்மூலம் அவர்கள் எல்லாவகையான சாட்சியங்களையும் துடைத்தழித்து விடலாம்.
இது வெளிப்படையாகத் தெரிய வரக் கொஞ்சக் காலம் எடுக்கும். எவ்வளவு மக்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டார்கள் எனக்கணக்கெடுக்கும் போது இது தெரிய வரும்.
இவை எல்லாம் முடிந்த பிறகு நமது பிபிசி செய்தியாளர்கள் அப்பிரதேசத்திற்குச் சென்று எவ்வளவு அழகிய நீல வானமும் தங்க நிற மணலும் கொண்டது இந்தக் கடற்கரை என்று வர்ணனை செய்வார்கள்.
நன்றி: ரெலிகிராப்
இந்த விசேட தமிழாக்கத்தை மீள் பிரசுரிப்பவர்கள் www.globaltamilnews.net எனப் பெயரிட்டு மீள்பிரசுரம் செய்யலாம்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக