சனி, ஜூலை 07, 2007

தேசிய அடையாளத்தைக் காப்பாற்ற, 'சிவாஜி" திரைப்படம் பார்க்க...?

-பரணி கிருஸ்ணரஜனி-

கடந்த யூன் மாதம் முதலாம் நாள் மாலை, இனிமையான பழைய நினைவுகளை அசை போட்டபடி ஒருவித ஆத்மார்த்த நிலைக்குள் எனது ஆழ்மனம் அமிழ்ந்திருந்த தருணத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு.

மறுமுனையில் அறிமுகமில்லாத ஒரு நபர், 'சிவாஜி" திரைப்படத்திற்கு ஒரு விமர்சனம் எழுதித்தரும்படியும், அதை ஒரு ஊடகத்தில் வெளியிட இருப்பதாகவும், தாங்கள்தான் அப்படத்தை சில ஐரோப்பிய நகரங்களில் திரையிட இருப்பதாகவும், முதல் காட்சிக்கு எனக்கு இலவச அனுமதி வழங்குவதாகவும், என்னைத் தொடர்ந்து பேசவிடாமல் ஏதேதோ உளறிக்கொண்டிருந்தார். யாரோ என்னை சினிமா விமர்சகர் என்று கிளப்பிவிட்ட வதந்தியின் அடிப்படை அவர் பேச்சில் அப்படியே எதிரொலித்தது.

'யாரோ என்னைப்பற்றி உங்களுக்குத் தவறான தகவலைத் தந்து விட்டார்கள். மன்னித்துக்கொள்ளுங்கள்" என்றபடியே அவரது இணைப்பைத் துண்டித்துக்கொண்டேன்.

இச்சம்பவம் நடந்து அடுத்த வாரத்தில் 'சிவாஜி" திரையிடப்பட்டு தமிழகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் 'வெற்றி நடை" போடும் செய்திகள் ஊடகங்கள் வழி தெரியவந்தது.

யதார்த்த நிலைமை இவ்வாறிருக்க, திடீரென்று 'சிவாஜி" திரைப்படத்தைப் புறக்கணியுங்கள் என்று சில குரல்கள் தாயகத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலும் கேட்கத் தொடங்கின. என்னை ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஒருங்கே ஆக்கிரமித்துக்கொண்டன என்பது மட்டுமல்ல இந்தப் பலவீனமான எதிர்ப்பு பெருங்கவலையையும் அளித்தது.

அப்போதே இத்தொடர் சம்பவங்கள் பற்றியும் 'சிவாஜி" திரைப்படம் குறித்தும், அதன் அரசியல் குறித்தும் எழுதத்தான் தீர்மானித்திருந்தேன். ஆனால் நிலைமையின் விபரீதத்தைப் புரிந்து மௌனம் காத்தேன். ஏனெனில் எனது எழுத்து எந்த வகையிலும் 'சிவாஜி"யை திரையிடுபவர்களுக்கும், அதன் திரையிடலை எதிர்க்கும் தமிழ்த் தேசிய குரல்களுக்கும் மாற்று விளைவுகளை கொடுத்துவிடக்கூடாது என்பதில் நான் தெளிவாகவே இருந்தேன்.

ஏனெனில் நான் முதலிலேயே ஒன்றைக்கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு பலவீனமான எதிர்ப்பைப் பதிவு செய்வதை விடப் பேசாமல் இருப்பதே சிறந்தது என்பது என் கருத்து. ஏனெனில் இந்தப் பலவீனம் இறுதியில் தமிழ்த் தேசியத்தின் பலவீனமாக வாசிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள்தான் அதிகம்.

தமிழ்த் தேசியத்திற்கு எதிரான குரல்களை அடையாளப்படுத்தும் ஒரு திரைப்படத்தை புறக்கணிப்பதாக் கூறிக்கொண்டு வெளிப்படும் ஒரு எதிர்ப்பு தன்னளவிலேயே பலவீனங்களைக் கொண்டிருப்பது வெளிப்படையாகத் தெரியும் ஒரு சூழலில் அதன் எதிர்ப்பு எம்மவராலேயே அபத்தமாகப்பார்க்கப்படுவது தவிர்க்க முடியாததாகிறது. இங்கு நடந்திருப்பதும் அதுதான்.

வேறு ஒரு வகையில் எமது ஒற்றுமையின்மையையும் பலவீனமான தமிழ்த் தேசிய கருத்துருவாக்கத்தையும்தான் இவை அடையாளப்படுத்துகின்றன. இதையொட்டித்தான் சில கருத்துக்களை நான் முன்வைக்க விரும்புகிறேன்.

எனக்கு பல விடயங்கள் இன்னும் புதிராகவே இருக்கிறது.

01. 'சிவாஜி" திரைப்படம் பூசை போடப்பட்டு இரண்டு வருடங்களுக்கும் மேலாகிறது. அதை எதிர்ப்பது என்று முடிவு செய்திருந்தால் அப்போதே அதைத் தொடங்கியிருக்க வேண்டும். ஏன் யாரும் அதைச் செய்யவில்லை?

02. இந்தியாவிற்கு வெளியில் தமிழகத் திரைப்படங்களைத் திரையிடுபவர்கள் ஈழத்தமிழர்கள்தான். அவர்களுடன் தொடர்பு கொண்டு 'சிவாஜி" திரைப்படத்தை வாங்கித் திரையிட வேண்டாம் என்று கேட்கப்படவில்லை. அது ஏன்?

03. முக்கியமானது தமிழ்த் தேசிய ஊடகங்கள் என்று தம்மைத்தாமே அறிவித்துக்கொண்ட பெரும்பாலான ஊடகங்கள் பல 'திடீரென்று முளைத்த" புறக்கணிப்பை பதிவு செய்ததுடன் போட்டி போட்டுக்கொண்டு 'சிவாஜி" க்கான விளம்பரத்தையும் செய்து தொலைத்தன- இன்னும் செய்து கொண்டிருக்கின்றன.

இவையெல்லாவற்றையும் ஒருசேர உற்று நோக்கும்போது புறக்கணிப்புப் போராட்டம் ஆரம்பமாகும் இடத்திலேயே செமத்தியாக அடிவாங்கத் தொடங்குவதை அவதானிக்கலாம்.

எனக்கு இன்னும் சில சந்தேகங்கள் இருக்கின்றன.

01. 'சிவாஜி" திரைப்படத்தை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

02. புறக்கணிப்புக்காக சொல்லப்படும் காரணங்கள் வலுவானவைதானா? எந்த அளவு கோலின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறது?

03. இந்த அளவுகோல் மற்றைய திரைப்படங்களுக்கும் தமிழக சினிமா உலகத்திற்கும் பொருந்தாதா?

04. சரி, 'சிவாஜி" திரைப்படம் ஏதோ ஒரு வகையில் ஈழத்தமிழர்களின் புறக்கணிப்பிற்கான எல்லா அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்றே வைப்போம். பல தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்குத் தெரிந்த இந்த 'அம்சம்" ஏன் தமிழ்த் தேசியத்தை வளர்க்கிறோம்- விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்துகிறோம் என்று கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசிய ஊடகங்களின் கண்ணுக்குத் தெரியவில்லை? போதாதற்கு புறக்கணிப்பையும் பதிவு செய்து திரைப்படத்திற்கு 'ரிக்கற்"றும் விற்ற அவற்றின் அரசியலை எந்த வகமைக்குள் பொருத்திப் பார்ப்பது?

இவற்றையெல்லாம் ஒரு குடுவைக்குள் போட்டு ஒரு குலுக்குக் குலுக்கி கவிழ்த்துக் கொட்டினால் பல 'உண்மைகள்" தெரிய வரும். பிரச்சினை ரஜினிக்காந்திடமோ சங்கரிடமோ இல்லை. பிரச்சினைக்குரியவர்கள் நாம்தான். அவர்களில்லை.

இதை வேறு ஒரு வகையில் சொன்னால் தலையையும் வாலையும் விட்டுவிட்டு நடுவிலை எதையோ பிடித்து இழுத்ததற்கு ஒப்பானது இது.

தமிழ்ச் சினிமா குறித்து, அது 'கோடம்பாக்கம்" சினிமாவாவேயொழிய தமிழ்ச் சினிமா அல்ல என்பதில் தொடங்கி அதை ஈழத் தமிழர்களாகிய நாம் எப்படி எதிர்கொள்வதென்பது வரை எனக்கு ஏகப்பட்ட வாசிப்புக்கள் இருக்கிறது. இதில் அதைப் பதிவு செய்யப் போனால் இது தொடர் கட்டுரையாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. (ஏற்கனவே 'கோலங்கள்" தொலைக்காட்சி தொடர் மாதிரி எனது எல்லாக் கட்டுரைகளையும் நீட்டி முழக்குவதாக நேற்றுத்தான் ஒரு நண்பர் குற்றம் சுமத்தியிருந்தார்.) எனவே குறிப்பிட்ட சில விடயங்களை அவதானிக்க பின்வரும் முகவரியில் சென்று நான் ஏற்கனவே 'தமிழக சினிமா" குறித்து எழுதிய சில கருத்துக்களை பார்க்கவும். http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=556&Itemid=60

தயவு செய்து மேற்குறிப்பிட்ட கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு அமைதியாகக் கொஞ்சம் யோசித்தாலே பிரச்சினை எங்களிடம்தானேயொழிய அவர்களிடம் இல்லை என்ற உண்மை 'கொஞ்சூண்டாவது" தெரியவரும்.

ரஜினிகாந்த் என்ற நபரின் திரைப்படங்கள் மட்டுமல்ல அவரே தமிழ்ச்சூழலில் இருந்து அகற்றப்பட வேண்டியவர் என்பதில் எனக்கு இரு வேறு கருத்துக்கள் கிடையாது. சங்கர் என்ற மனிதருக்கும் இது பொருந்தும். அதற்கான காரணங்கள் 'சிவாஜி" படத்தைப் புறக்கணியுங்கள் என்று சில நண்பர்கள் முன்வைத்த காரணங்களையும் விட வலுவான பின்னணி கொண்டது. அதையும் இங்கு நான் அடுக்க விரும்பவில்லை. அது எனது இந்தப் பத்தியின் நோக்கத்தை திசைமாற்றி விடக்கூடியது.

ஈழத்தமிழ்ச் சூழலுக்கு முற்றிலும் பொருத்தமற்ற, பல்வேறு காரணங்களால் புறக்கணிப்புக்கு முழுத்தகுதியும் கொண்ட ஒரு திரைப்படத்தை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எதிர்கொண்ட அவலத்தைப் பேச முற்படும் இப்பத்திக்கு அவை தேவையற்ற தரவுகள் என்றே கருதுகிறேன்.

தமிழ்ச் சினிமா, சினிமா ரசனை, தமிழ் அடையாளம், மாற்று சினிமா, எமக்கான சினிமா என்று பேசுவதற்கு ஏகப்பட்ட விடயங்கள் இருக்கின்றன. ஒரு போராடும் இனம் என்ற அடிப்படையில் இது குறித்த கருத்துருவாக்கங்கள் தமிழ்த் தேசிய ஊடகங்கள் வழி ஆக்கபூர்வமான முறையில் எங்கேனும் முன்வைக்கப்பட்டிருக்கிறதா?

மாறாக எமது ஊடகங்கள் புலம்பெயர் தமிழர்களுக்கும் கோடம்பாக்கத்துக்கும் இடைத்தரகர் வேலைதான் செய்து கொண்டிருக்கின்றன. எமது ஊடகங்களின் இந்தப் புண்ணியத்தில் புலம்பெயர் தமிழர்கள் கோடம்பாக்க சினிமா குறித்த அறிவியலில் 'புல்போர்ம்" இல் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் 'சிவாஜி"யைப் புறக்கணி. 'எம்ஜிஆரைப்" புறக்கணி என்றால் என்ன எதிர்வினை கிடைக்கும்....

படிப்படியாக கோடம்பாக்க சினிமா மோகத்திலிருந்து ஈழத் தமிழர்களை மீட்டு அவர்களை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கருத்தியலை பல தளங்களிலும் வளர்க்க வேண்டிய தமிழ் ஊடகங்களே தமிழர்களை அந்தச் சாக்கடைக்குள் அமிழ்த்தி வைத்துள்ளதும் அதையே தமது தேசியத் 'திருப்பணி"யாக செய்து வரும் சூழலிலும் இத்தகைய புறக்கணிப்புப் போராட்டங்கள் மலினப்பட்டுவிடும் அபாயம் தொடரத்தான் செய்யும்.

இது இறுதியில் தமிழ்த் தேசியம் என்பதே பலவீனம் நிறைந்ததுதான் என்ற ஒட்டுமொத்த வாசிப்புக்குத்தான் வழிசமைக்கும். எனவே புறக்கணிப்பு போராட்டம் நடத்த முன்வரும் சமூக ஆர்வலர்கள் 'புலம்பெயர் தமிழர்கள்" என்று விளித்து அறைகூவல் விடுவதைத் தவிர்த்து புலம்பெயர் தமிழ்த் தேசிய ஊடகங்களின் இந்த இரட்டைப்போக்குக்கு எதிராக ஒரு போராட்டத்தை முதலில் நடத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த மக்களை நெறிப்படுத்தும் ஊடகங்களே 'சிவாஜி" திரையரங்கை நோக்கி மக்களை கூவிக்கூவி அழைத்துச் செல்லும்போது நீங்கள் கொஞ்சப்பேர் மட்டும் கத்துவது அபத்தமாக இருக்கிறது. வேறு ஒரு வகையில் அநியாயமாகவும் தெரிகிறது.

தயவு செய்து மக்கள் மீது பழி போடாதீர்கள்.

எனவே முழுப்பழியையும் ஏற்றுக்கொள்ளவேண்டியவை தமிழ்த் தேசிய ஊடகங்கள்தானேயொழிய அதைத் திரையிடுபவர்களோ அன்றி மக்களோ அல்ல.

ஒரு இனத்தை எடை போடுவதற்கு அந்த இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஊடகத்துடன் குறிப்பிட்ட சில மணிநேரங்களை செலவு செய்தால் போதும் என்று சொல்வார்கள். தமிழினத்தை எடை போடுவதற்கு ஒரு சில நிமிடங்களே போதும். அதன் இரட்டைத்தன்மையை அறிந்து கொள்வதற்கு. ஒருபக்கம் விடுதலைத் தீயின் கங்குகளும் மறுபக்கம் கோடம்பாக்கத்து கழிவுகளை தினமும் புசிப்பதால் வரும் துர்நாற்றமும்....

தமது தவறுகளை மறைப்பதற்காக வியாபார நிர்ப்பந்தம், போட்டி, ஜனரஞ்சகம் போன்ற வார்த்தைப் பிரயோகங்களையும் அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளத் தவறுவதில்லை தமிழ்த் தேசிய ஊடகங்கள். போராடும் இனத்தை பிரதிபலிக்கும் ஊடகங்களுக்கு எங்கிருந்து வந்தது போட்டி....

உயிரைக்கொடுத்துப் போரடுகிறவனுக்கு அது என்ன ஜனரஞ்சகம்....
யாராவது விளக்கமளித்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும்.

இனி விடயத்திற்கு வருவோம்.
நாம் யார்? விடுதலைக்காகப் போராடும் ஒரு இனம். எமக்கென்று சில பொதுவான நிலைப்பாடுகள் இருக்கின்றன. அதன் வழியே சில கருத்துருவாக்கங்கள் தோற்றம் பெறுகின்றன. அது என்னவென்று சாதாரண ஒரு நபருக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் அது என்னவென்பதை கண்டடைவதும் அதன் வழியே அக்கருத்தியலை வளர்ப்பதும் தான் ஊடகங்களின் பணி என்று சொல்லப்படுகிறது.

உலகில் மனித நாகரீகங்களின் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டமாய் தொடர்பாடலும் அதன் நிமித்தமாய் செய்தி பரிமாற்றமும் அவசியமாகியது. ஊடகங்கள் தோற்றம் பெற்றன. வளர்ச்சிப் போக்கில் நாகரீகங்களின் பரிணாமத்தின் முதிர்ந்த கட்டமான இன்று ஊடகங்கள் செய்திகளை பரிமாறுவதில்லை. செய்தி என்ற வடிவத்தில் தமது அரசியலைத்தான் பேசுகின்றன. தமது தேவை சார்ந்து எழுந்த கருத்துருவாக்கங்களைத்தான் முன்வைக்கின்றன.

இன ரீதியாக, மொழி ரீதியாக, மத ரீதியாக என்று பல வழிகளிலும் பிளவுபட்டிருக்கும் உலகம் தாம் சார்ந்திருக்கும் குழுமம் சார்ந்து எழுந்ததும் தமக்குத் தேவையானதென்று கருதுவதுமான கருத்தியலைத் தமது ஊடகங்கள் வழி தொடர்ந்து கட்டமைக்கின்றன.

உதாரணத்திற்கு அமெரிக்க ஊடகங்கள் என்ன கருத்தியலைப் பேசுகின்றன என்று பார்த்தால் அவை அமெரிக்காவின் சண்டித்தனத்தையும் அதன் உலகப் பொலிஸ்காரன் பாத்திரத்தையும் தொடர்ந்து தக்க வைக்கும் கருத்துருவாக்கங்களைத்தான் பேசுகின்றன - கட்டமைக்கின்றன. வெளிப்பார்வைக்கு பல தோற்றங்கள் காட்டினாலும் அதன் அடித்தளமும் அடிப்படையும் மேற்குறித்த கருத்துருவாக்கங்கள்தான்.

இப்படித்தான் இந்திய ஊடகங்கள் இந்துத்துவத்தையும் பாகிஸ்தானிய ஊடகங்கள் இஸ்லாமிய சித்தாந்தத்தையும் சிங்கள ஊடகங்கள் பௌத்த பேரினவாதத்தையும் பிடித்துத் தொங்குகின்றன. இந்தக் கருத்துருவாக்கங்கள் சரியா தவறா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஒரு இனக்குழுமத்தை அடையாளப்படுத்தும் ஊடகங்களுக்கு ஒரு கருத்தியல் இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம்.

ஆகவே எமது தமிழ் ஊடகங்களும் ஒரு கருத்தியலை பேசவேண்டும் என்பது வெளிப்படை. அது என்ன? நாம் ஒரு தேசிய இனம் என்றும் எங்களுக்கென்று ஒரு பூர்வீக நிலம் இருக்கிறதுதென்றும் அதில் நாம் சுதந்திரமாக வாழ அனுமதியுங்கள் என்றும் கேட்டுப் போராடுகிறோம்.

ஆகவே எமது ஊடகங்கள் பேச வேண்டிய கருத்தியல் இதைச்சுற்றியதென்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. சரி அது என்னவென்று விரிவாகப் பார்ப்போம்.

முதன்மைக் கருத்துருவாக்கம் 'தேசியம்". இதை மையப்படுத்தி பல கிளைகள் விரிகின்றன. போராட்டத்தையும் விடுதலையையும் ஊடறுத்து எமது மொழி, எமது பண்பாடு, எமது அடையாளம், எமது கலாச்சாரம், எமது வாழ்வு என்று கிளை விரிக்கிறது அது.

எனவே எமது ஊடகங்கள் வழி வெளிப்பட வேண்டியவை இவைதான் - இவை மட்டும்தான். ஆனால் எமது ஊடகங்களைத் திறந்தால் எமக்குத் தெரிவது என்ன? பம்பரம் விடுவதற்கும், ஓம்லெட் போடுவதற்கும் தேவையான புதுப்புது இடங்கள்தான்.

எனவே "சிவாஜி" திரைப்படத்தில் ரஜினிக்காந்த் பம்பரம் விடுவதற்கும், ஓம்லெட் போடுவதற்கும் தேவையான "னகைகநசநவெ டழஉயவழைn" எதையாவது சுட்டிக்காட்டலாம் என்று நினைத்து ஒரு தமிழன் ஓடுவதில் ஏதும் வியப்பதற்கில்லை. இது தமிழ்த் தேசிய ஊடகங்கள் தினம் தினம் வீட்டுக்குள் கொண்டுவந்த கருத்தியல் சிந்தனை. என்னைப் பொருத்தவரை 'சிவாஜி" யைப் பார்க்க ஒருவர் திரையரங்கு செல்லாமல் இருப்பதுதான் ஆச்சர்யமான விடயம்.

'சிவாஜி" மட்டுமல்ல 99 விழுக்காடு கோடம்பாக்க திரைப்படங்கள் எமது மொழி, எமது பண்பாடு, எமது அடையாளம், எமது கலாச்சாரம், எமது வாழ்வு மீது ஒரு வன்முiறாகக் கட்டவிழ்ந்து 'தேசியம்" என்ற முதன்மைக் கருத்துருவாக்கத்தினைச் சிதைத்து எமது பேராட்டத்தையும் விடுதலையையும் பின்னடையச்செய்கின்றன.

எனவே சில தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் 'சிவாஜி" திரைப்படத்தை புறக்கணிக்க முற்பட்ட செயலானது பிரச்சினையின் மூலத்தை - அதன் வேரை விட்டுவிட்டு அதன் ஒரு விளைவு மீது குற்றத்தைச் சுமத்தியதற்கு ஒப்பானது.

நான் ரஜினிக்காந்த் என்ற மனிதருக்கு வருகிறேன். அவர் யார் என்று படத்தை புறக்கணிக்கச் சொன்னவர்கள் தெளிவாகவே பட்டியலிட்டுள்ளார்கள். ஆனால் எமது தமிழ் ஊடகங்கள் அவர் குறித்து கட்டமைத்திருக்கும் பிம்பம் அவரை ஒரு நல்ல நடிகராக மட்டுமே.. இதை எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தில் கூட ஒரு தமிழ்த் தொலைக்காட்சியில் அவர் நடித்த 'நெற்றிக்கண்" படம் ஓடிக்கொண்டிருக்கிறது. நான் விரும்பாத போதும் என் வீட்டிற்குள் ஒரு தமிழ்த் தொலைக்காட்சியின் புண்ணியத்தில் ரஜினிக்காந்த் வந்துவிட்டார். அவர் நாளையும் வரலாம்.....

என் கேள்வி இதுதான். இதையே திரையரங்குக்கு போய்ப்பார்த்தால் மட்டும் ஏன் பிரச்சினை என்கிறீர்கள்? தமிழ்த் தேசிய ஊடகங்கள் ரஜினிக்காந்த் என்ற மனிதரை வீட்டுக்குள் கொண்டு வருவதை முதலில் தடை செய்யுங்கள்.

தழிழ்த் தேசிய ஊடகங்களில் 'கோடம்பாக்க சினிமா" ஒரு பேசு பொருளாக (ஏன் மையப்பொருளே அதுதான்) இருக்கும் வரை தயவுசெய்து யாராவது கோடம்பாக்க சினிமாவை - சினிமாக்காரர்களை - சினிமாக் கலை விழாக்களைப் புறக்கணியுங்கள் என்று போராட்டம் நடத்தாதீர்கள்.

எமது தமிழ் ஊடகங்கள் கோடம்பாக்க சினிமாத் தளைகளிலிருந்து விடுபடும் பட்சத்தில் கோடம்பாக்க சினிமாவிலிருந்து எமது மக்களே அந்நியப்பட்டுவிடுவார்கள்.
போராட்டம் எல்லாம் தேவையில்லை.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் எல்லாவற்றையும் ஒரு ஊடகத்துறை நண்பர் ஒருவரிடம் கூறினேன். அவர் சொன்னார். 'சினிமா இல்லாமல் எந்த ஊடகத்தையும் நடத்த முடியாது. நீ போகாத ஊருக்கு வழி சொல்லுகிறாய்". அதற்கு நான் 'மக்கள் தொலைக்காட்சி" வந்த பின்னும் இன்னும் பித்தம் தெளியவில்லையா என்றேன்.
அவர் சங்கடமாகத் தலையைக் குனிந்து கொண்டார்.

ஒரு இனத்திற்கான ஊடகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை 'மக்கள் தொலைக்காட்சி" யைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். கடந்த முறை நான் தமிழ்நாட்டிற்கு சென்றிருந்தபோதுதான் 'மக்கள் தொலைக்காட்சி" யின் ஆரம்ப பணிகள் நடந்துகொண்டிருந்தன. மேற்குறிப்பிட்ட ஊடகத்துறை நண்பர் அடித்த "உழஅஅநவெ" ஐத்தான் நான் தமிழகத்தில் கூறிவிட்டு வந்திருந்தேன். அதற்காக இப்போது வெட்கித் தலைகுனிகிறேன்.

'மக்கள் தொலைக்காட்சி" அது ஒரு ஊடகம் இல்லை. எமது ஊடகக்காரர்களுக்கு அது ஒரு பாடம். தமிழகத்திலேயே இந்தச் சாதனையை அவர்கள் நிலை நாட்டியிருக்கும்போது இங்கு நம்மால் முடியாதா? கிட்டத்தட்ட தமிழகத்தில் 'மக்கள் தொலைக்காட்சி" யின் உதயம் என்பது சூரியனை மேற்கில் உதிக்க வைத்ததற்கு ஒப்பானது.

எமது தமிழ் ஊடகங்களிடம் உள்ள பிரச்சினையே மக்களினுடைய விருப்பாக - தேர்வாக தாமே சில விடயங்களைக் கற்பனை பண்ணிக்கொள்ளவதுதான். இன்று 'மக்கள் தொலைக்காட்சி" மக்களுக்கு எது பிடிக்கும் என்பதையும் கொடுக்கிற விதத்தில் கொடுத்தால் மக்கள் எதையும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதையும் தமிழகத்தில் சாதித்துக் காட்டியிருக்கிறது.

போராடும் இனம் என்ற அடிப்படையில் எமக்குத் தேவையானதும் அவசரமானதும் ஒரு மக்கள் தொலைக்காட்சியே - ஒரு மக்கள் வானொலியே - ஒரு மக்கள் பத்திரிகையே.....
இப்போது இருக்கும் இரட்டைத் தன்மை நிலைப்பாட்டு ஊடகங்கள் எதுவும் வேண்டாம். இது உயிர்ப்பிரச்சினை. பலர் உயிரைக் கொடுத்துப் போராடிக்கொண்டிருக்கும் போது தயவு செய்து 'ஜனரஞ்சகம்" பேசாதீர்கள். உங்களுடைய 'ஜனரஞ்சகம்" எமது தேசியக் கருத்துருவாக்கத்தினைச் சிதைப்பதனால் தயவு செய்து அதிலிருந்து மீண்டு விடுங்கள்.
மேலே குறிப்பிட்டது போல் போல் எமது முதன்மைக் கருத்துருவாக்கம் 'தேசியம்". இதை மையப்படுத்தி பல கிளைகள் விரிகின்றன. போராட்டத்தையும் விடுதலையையும் ஊடறுத்து எமது மொழி, எமது பண்பாடு, எமது அடையாளம், எமது கலாச்சாரம், எமது வாழ்வு என்று கிளை விரிக்கிறது அது.

எமது ஊடகங்கள் வழி 'கோடம்பாக்க சினிமா" கடை விரிப்பது இவை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகச் சிதைக்கிறது. எமது விடுதiலையைப் பின்னடையச் செய்கிறது. இது சாதாரண ஒருவருக்குத் தெரியாமலிருக்கலாம் - ஆனால் தேசியத்தை வரித்துக் கொண்ட ஊடகங்களிற்குத் தெரியாமல் இருப்பது தமிழினத்தின் அவலமா? அறியாமையா?

இறுதியாக ஒரு விடயம். தமிழ்த் தேசியத்திற்கு எதிரான எந்த விடயத்தையும் எதிர்ப்பதென்றாலும் புறக்கணிப்பதென்றாலும் அதை நாம் எல்லோரும் சேர்ந்து செய்வோம். குறிப்பாக தமிழ்த் தேசியத்தைத் தாங்கும் ஊடகங்களின் பங்களிப்பு அவசியம் என்பதை நாம் மட்டுமல்ல அந்த ஊடகங்களும் உணர வேண்டும்.

தமிழ்த் தேசிய ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்காத இரட்டை நிலைப்பாடு எடுக்கும் எந்தப் போராட்டத்தையும் நடத்தாதீர்கள். அது இந்த உலகத்திற்கு எம்மையே இரண்டாகப் பிளவுபடுத்திக் காட்டக்கூடியது. இது எமது போராட்டம் சார்ந்த நல்ல அறிகுறி அல்ல.....

ஒரு கொசுறுச் செய்தி:

நான் நாளை 'சிவாஜி" திரைப்படம் பார்க்க திரையரங்கு செல்கிறேன். வீட்டுக்குள் மட்டுமல்ல நான் செல்லுமிடமெல்லாம் என்னைப் பின்தொடரும் தமிழ் ஊடகங்கள் என்னைத் தொடர்ச்சியாக 'சிவாஜி" திரையரங்கை நோக்கிக் துரத்திக்கொண்டேயிருக்கின்ற��
. நான் தமிழ்த் தேசியத்தை இறுகப்பற்றியவன். அதன்வழி நடப்பவன். தமிழ்த் தேசிய ஊடகங்களின் இந்த அழைப்பை தொடர்ச்சியாக நிராகரிப்பதனூடாக எனது தேசிய அடையாளத்தை இழந்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன். அதனால்தான் எனது 'தேசிய" அடையாளத்தைக் காப்பாற்ற நான் நாளை 'சிவாஜி" திரைப்படம் பார்க்க திரையரங்கு செல்கிறேன்.
http://www.tamilnaatham.com/articles/2007/...ani20070706.htm

6 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

//தழிழ்த் தேசிய ஊடகங்களில் 'கோடம்பாக்க சினிமா" ஒரு பேசு பொருளாக (ஏன் மையப்பொருளே அதுதான்) இருக்கும் வரை தயவுசெய்து யாராவது கோடம்பாக்க சினிமாவை - சினிமாக்காரர்களை - சினிமாக் கலை விழாக்களைப் புறக்கணியுங்கள் என்று போராட்டம் நடத்தாதீர்கள்.//

கரெக்ட்தான் நீங்க சொல்றது!

வீட்டுல சினிமாவை டிவில/டிவிடில பார்த்துகிட்டு வெளியே வந்து சினிமாவைப் புறக்கணியுங்கள்னு சொன்னா தமாஷாத்தான் இருக்கும்!

வவ்வால் சொன்னது…

//திடீரென்று 'சிவாஜி" திரைப்படத்தைப் புறக்கணியுங்கள் என்று சில குரல்கள் தாயகத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலும் கேட்கத் தொடங்கின. என்னை ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஒருங்கே ஆக்கிரமித்துக்கொண்டன என்பது மட்டுமல்ல இந்தப் பலவீனமான எதிர்ப்பு பெருங்கவலையையும் அளித்தது.//


புறக்கணிக்க என்ன காரணம்? அவர்கள் சொன்ன காரணத்தை வெளியில் சொல்ல முடியாத அளவில் ஒரு காரணமா அது?

இப்படி எதுவும் சொல்லாமல் ஏதோதோ நீட்டி முழக்கி ஒரு பதிவா? சிவாஜி வந்தாலும் வந்தது சப்பை மேட்டருக்கு எல்லாம் அதனை பயன்படுத்த ஆரம்ப்பித்து விட்டார்கள் பதிவுலகில்!

ஆயில்யன் சொன்னது…

//எமது தமிழ் ஊடகங்கள் கோடம்பாக்க சினிமாத் தளைகளிலிருந்து விடுபடும் பட்சத்தில் கோடம்பாக்க சினிமாவிலிருந்து எமது மக்களே அந்நியப்பட்டுவிடுவார்கள்.போராட்டம் எல்லாம் தேவையில்லை//

உண்மைத்தான். எங்களுக்கே(தமிழ்நாடு ஆளுங்களுக்கே) தெரியாத,அறியாத கோடம்பாக்கத்து சினிமாக்களை (சந்திரமதி,தப்பா?ரைட்டா!) இது போன்ற "தமிழ் ஊடகங்களிலிருந்து" டவுன்லோடு செய்து பார்க்கும் என் ஈழத்து நண்பர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்!
(எப்ப பாட்ட மாத்தபோறீங்க பிருந்தன்!?)

பெயரில்லா சொன்னது…

//தயவு செய்து மேற்குறிப்பிட்ட கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு அமைதியாகக் கொஞ்சம் யோசித்தாலே பிரச்சினை எங்களிடம்தானேயொழிய அவர்களிடம் இல்லை என்ற உண்மை 'கொஞ்சூண்டாவது" தெரியவரும்.//

தம்பி பிருந்தன் பிரச்சனை எங்களிமும் இல்லை அவர்களிடமுமில்லை உம்மைப்போன்ற சில அதி்மேதாவி குழந்தைகளிடம்தான் இருக்கிறது. எது சரி என்று தானும் குழம்பி மற்றவரையும் குழப்புவது. போய் நன்றாக தூங்கும் பொழுதுபோகவில்லையா போய் சிவாஜி படம் பாரும். அதைவிட்டிட்டு சும்மா அலட்டீக்கொண்டு (உங்க உபத்திரவம் தாங்க முடியல) இத்தனை ஆயிரம் போராளிகள் அறிவான தலைவன் இருக்கும்போது. இந்த ரஜினி எங்களுக்கு ஆதரவா இருந்து ஒன்றும் நாங்க கிழிக்கப்போறல ஓகே. எனியாவது சிவாஜி பற்றி எழுதி தமிழ்மமணத்தில மற்ற லூசுகல மாதிரி சூடான பதிவில இடம் பிடிக்கவேண்டும் என்று நினைக்காதே.

நிர்மலன்

பெயரில்லா சொன்னது…

'சிவாஜி' போன்ற படங்களை ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல அனைவருமே புறக்கணிக்க வேண்டும். 'சிவாஜி' மட்டுமல்ல.. இதை போல பல படங்களையும் தூக்கி கடாச வேண்டும்.ஈழத்தமிழர்கள் மட்டும் இவைகளை புறக்கணியுங்கள் என்று சொல்வதின் உளவியல் காரணம் யோசிக்க வைக்கிறது.

இருந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு அமைந்திருப்பதாக நான் நினைக்கிறேன். தமிழ் நாட்டிலிருந்து வரும் 'மசாலா' படங்களை பற்றியும்,குப்பை படங்களையும் பார்த்து,பார்த்து அனுபவபட்ட அவர்கள், இந்த மாதிரி படங்களை தவிர்த்து விட்டு நேரிடையாக நல்லப் படங்களை தயாரிப்பதற்கு போய்விடலாம். இரானிய படங்களை போல,எதிர் காலத்தில் ஈழத்தமிழ் படங்களும் உருவாக நல்ல வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். கிடைத்த வாய்ப்பை தவறவிட்டால் ரஜினிகளும்,குஷ்புகளும்...பீர் அபிஷேக கூத்துக்களும் யாழ்ப்பாணத்திலும் தோன்றும்.

ஜீவி சொன்னது…

:-)

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us